டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!
டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதல் பணம் பெற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பணியாளர்களுக்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்(டாஸ்மாக்) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வரும் நிலையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில், "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக, தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Advertisement
எனவே, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து கடைப்பணியாளர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதை தடுக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் நேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் மாவட்ட மேலாளர்களும் சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து மண்டலத்திலுள்ள (Flying Squad Deputy Collectors) பறக்கும் படை துணை ஆட்சியர்கள் தத்தம் மண்டலத்தில் தெரிய வரும் புகார்கள் குறித்தான மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை ஆய்வு செய்து, தவறு செய்யும் கடைப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.