டாஸ்மாக் வருவாயில் மாதந்தோறும் ரூ.102 கோடி முறைகேடு! விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவு
டாஸ்மாக் வருவாயில் மாதத்துக்கு ரூ.102 கோடி முறைகேடு நடந்ததாக வந்த புகார் மீது விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் வருவாயில், மாதந்தோறும் ரூ.102 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக கட்சி நிதி என்ற பெயரில் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்தது குறித்து விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தின் மதுபான நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் நடக்கும் வருவாய் முறைகேடுகள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வசூல் நடவடிக்கை மீது விரிவான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறுவதாவது, ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் டாஸ்மாக் வருவாய் கட்சி நிதி என்ற பெயரில் திசை திருப்பப்பட்டு வந்ததுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மூலம் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் ரூ.3,600 கோடியைத் தொட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் தமிழக முதல்வர் விஜய்யிடம் கூறியதையடுத்து, புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடைய செயல்பாட்டைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் முறையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளது, நல்ல வருவாய் இருந்தாலும், தமிழக அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளி, கல்லூரிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கி வந்த 717 மதுபான விற்பனை நிலையங்களை மூடியிருக்கிறது.
டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வரும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக அரசின் கருவூலத்துக்கு வந்து சேருவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக்கின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் நீண்ட காலமாக இயங்கி வரும் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளை கலைத்துவிடவும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தர்விட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் உள்ளன.
டாஸ்மாக் கடைகளை இயக்குவது, மதுபானங்கள் கொள்முதல் மற்றும் கிடங்குகளிலிருந்து மதுபானங்களை கொண்டு வருவது, சில்லறை விற்பனை நிலையங்களின் நடவடிக்கைகள் மற்றும் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது, சில்லறை விற்பனைக் கடைகளில் பணத்தை வசூல் செய்யும் அமைப்புகள் என அனைத்திலும் ஒரு மிகப்பெரிய நிர்வாக சீரமைப்பு நடைபெறவிருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CM Vijay orders probe into alleged monthly fraud of Rs 102 crore in TASMAC revenue
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.