மே 22-ல் பிரதமரைச் சந்திக்க தில்லி செல்கிறார் முதல்வர் விஜய்?
பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழக முதல்வர் விஜய் தில்லி செல்வதாகத் தகவல்...
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க வரும் மே 22 ஆம் தேதி தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தில்லி செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சி குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் விரைவில் தில்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, தில்லியில் பிரதமர் மோடியை வரும் மே 22 ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்தித்து உரையாடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பில், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு, கட்டமைப்புத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநில நிர்வாகத்தின் முன்னுரிமைகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் தில்லி பயணத்தில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன், மரபுகளின்படி மரியாதை நிமித்தமாக தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் குறித்தும், எத்தனை நாள்கள் அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் என்பது குறித்தும் தமிழக அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.