முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் பற்றி...
தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை தில்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இல்லாததால், காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றாா்.
தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு விஜய்யும் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதல்வரான பிறகு முதல்முறையாக ஜோசப் விஜய் நாளை தில்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயணத்தில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிலுவையில் உள்ள நிதி விடுவிப்பு, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் நேரில் கடிதம் வழங்கவுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் மரியாதை நிமித்தமாக விஜய் சந்திக்கவுள்ளார்.
முதல்வர் விஜய்யின் தில்லி வருகையையொட்டி, தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதல்வர் தங்கும் அறை, ஆலோசனை அரங்கம் உள்ளிட்டவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.