வேதாரண்யத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர்! மக்கள் அவதி!
வேதாரண்யத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததில் பொதுமக்களும், விவசாயிகளும் வேதனையடைந்துள்ளனர்.
வேதாரண்யத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் வேதனையடைந்துள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட பலமான கடல் காற்று வீசுவது வழக்கம்.
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களையொட்டி கடல் நீர்மட்டம் உயர்ந்து காற்றின் வேகம் அதிகரிப்பதும் இயல்பானது.
Advertisement
வேதாரண்யம் கடலோரப் பகுதியில் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், பெருக்கெடுத்த கடல் நீர் வாய்மேடு- தென்னடார் கிராமங்கள் இடையே முள்ளியாற்றின் கழிமுகப் பகுதியான கண்டி எனும் உடைப்பின் வழியே புது ஆறு பகுதியில் உப்பு நீர் உள் புகுந்துள்ளது.
நேற்று (மே 19) முற்பகல் முதல் வழக்கத்தைவிடவும் வேகமாக வீசிவரும் காற்றால் மரக்கிளைகள் மின் கம்பிகளில் மோதி அவ்வப்போது மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
காற்று தொடர்ந்து வீசுவதால் கடல் நீர் முள்ளியாற்றின் வழியாக திருத்துறைப்பூண்டி வரையில் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் உப்பாக மாறி விளைநிலங்களை பாதிக்கச் செய்யும் ஆபத்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கண்டி பகுதியில் ஏப்ரல் மாதத்தில் தற்காலிக மண் தடுப்பு அணை பொதுப்பணித்துறை மூலமாக அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு பணிகள் தாமதமானதால் உப்பு நீர் உள் புகுந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்துள்ளார்.