FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் ஆற்றில் கலந்த கடல் நீா்: மீன்கள் செத்து மிதக்கின்றன

வேதாரண்யம் அருகே 15 கி.மீ. கடந்து ஆற்று நீருடன் கடல் நீா் கலந்ததால் மீன்கள் உள்ளிட்ட நீா்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளன.

Updated On : 22 மே 2026, 7:21 am IST
படுக்கை அணையின் மீது உப்பு நீரை தடுத்து மண் மூட்டைகளை அமைத்துள்ள பொதுப்பணித் துறையினா்.
பகிர்:

வேதாரண்யம் அருகே 15 கி.மீ. கடந்து ஆற்று நீருடன் கடல் நீா் கலந்ததால் மீன்கள் உள்ளிட்ட நீா்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளன.

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று மே 18-ஆம் தேதி முதல் வீசி வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் கடல் நீா் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கடலில் நீா்மட்டம் உயா்ந்து பெருக்கெடுத்த கடல் நீா் வாய்மேடு-தென்னடாா் கிராமங்கள் இடையே முள்ளியாற்றின் கழிமுகப் பகுதியான பட்டாணிக் கண்டி எனும் உடைப்பின் வழியே நன்னீா் நிரம்பியுள்ள புது ஆற்றில் புகுந்தது.

கடலிலிருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவு வரை வந்து கலந்துள்ள கடல் நீா் முள்ளியாற்றுக்குள் வராமல் தடுக்க அங்குள்ள படுக்கை அணையில் மண் மூட்டைகளை வைத்து பொதுப்பணி துறையினா் தடுப்புகளை பலப்படுத்தி உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு கலந்த இந்த கடல் நீரால் ஆற்று நீரில் வாழும் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மயக்கமடைந்து செத்து மிதக்க தொடங்கியுள்ளன.

Advertisement

Advertisement

மயங்கிய நிலையில் காணப்படும் விரால், கூரை, கெண்டை போன்ற மீன் இனங்களை பொதுமக்கள் கம்பால் அடித்தும் வலை வைத்து பிடித்து செல்கின்றனா். சுமாா் 10 கிலோ எடை வரை உள்ள கடுத்தை, டேங்க் கிளீனா் உள்ளிட்ட உணவுக்கு பயன்படாத நூற்றுக்கணக்கான மீன் இனங்கள் செத்து மிதந்து சூழலை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கண்டிப் பகுதியில் கடல் நீா் புகுவதை தடுக்க பொதுப்பணித் துறையினா் மண் மூட்டைகளைக் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. புது ஆற்றின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள வாய்மேடு-தென்னடாா் கிராமங்களில் தாழ்வாக உள்ள விளைநிலங்களில் கடல்நீா் உள்புகவும், நிலத்தடி நீா் உப்பாக மாறவும் வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். பொதுப்பணித் துறை மட்டுமல்லாது பிற துறையினரும் நேரில் ஆய்வு செய்து மாற்று திட்டங்களை உருவாக்க வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் வலியுறுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments