இணையதள டெண்டர் விவகாரம்: 2 பேர் பணியிடை நீக்கம்!
இணையதள டெண்டர் விவகாரம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் தொடர்பாக...
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இணையதளம் வழியில் அறிவிக்கப்பட்ட டெண்டர் சில மணி நேரத்தில் முடிவடைந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட காரைப்பேட்டை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்காக, ரூ. 16.83 லட்சம் மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டது.
இந்த ஒப்பந்த அறிவிப்பு, வெளியிடப்பட்ட அதே நாளிலேயே முடிவடைந்த நிலையில், இந்த டெண்டர் முன்கூட்டியே முடிந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த ஒப்பந்தத்தில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
Advertisement
Advertisement
ஒப்பந்த விதிகளின்படி, இணைய வழியில் வெளியிடப்படும் ஒப்பந்த அறிவிப்பானது, பங்கேற்பார்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில், மே 12 ஆம் தேதியே இணையதளத்தில் பங்கேற்பாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மே 18 ஆம் தேதி ஒப்பந்த அறிவிப்பு தயாரிக்கப்பட்டு, மே 19 ஆம் தேதி வெளியிட்டப்பட்டது.
உரிய அதிகாரியிடமிருந்து ஒப்புதலைப் பெறாமலேயே, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவி பொறியாளர் இந்த குறுகிய கால ஒப்பந்த அறிவிப்பை (short-term tender) வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காகவும், உரிய ஒப்புதல் இல்லாமல் குறுகிய கால ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டதற்காகவும், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கே. சாந்தி மற்றும் உதவிப் பொறியாளர் கயல்விழி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.