முதல்வர் விஜய் தலைமையில் 7 பட்டியலின அமைச்சர்கள்! இதுவரை இல்லாத அதிகபட்சம்!!
தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 7 பட்டியலின எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 7 பட்டியலின எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் பொதுவாக 3 முதல் 4 அமைச்சர்கள் என்ற அளவில் மட்டுமே இருந்து வந்துள்ளனர்.
தமிழ்நாடு வரலாற்றில், காங்கிரஸ் அமைச்சரவையில் முதல் பட்டியலின அமைச்சராக பி. கக்கனும், திமுகவில் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி அமைச்சரவையில் சத்தியவாணி முத்துவும் இடம்பெற்றிருந்தனர்.
Advertisement
Advertisement
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக மதிவேந்தன், கோவி. செழியன், சி.வி. கணேசன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய்யின் தலைமையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், எழும்பூர் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ராஜ்மோகன் கடந்த மே 10 ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். அவருக்கு தமிழக பள்ளி கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் பேரவைத் தலைவரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மத்திய அமைச்சர் எல். முருகனை அவிநாசியில் தோற்கடித்த இளம் எம்.எல்.ஏ. கமலி, ஓட்டப்பிடாரம் தனி தொகுதி வெற்றி பெற்ற மதன் ராஜா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையைத் தோற்கடித்த தென்னரசு, அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்ற காந்திராஜ் மற்றும் காங்கிரஸ் சார்பில் மேலூர் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
1967 ஆம் ஆண்டு முதல்முறையாக ஆட்சிக்கு வந்த திமுக அமைச்சரவையில் அன்றுமுதல் இன்றுவரை இதுவரை ஏழு பேரை மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், அதில் நான்கு பேர் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றியிருந்தனர்.
முதல்முறையாக ஆட்சியமைத்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 7 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.