சமூக நீதி, நல்லாட்சி, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அரசாக செயல்படும்: அமைச்சர் ஷாஜகான்
சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்குச் சேவையாற்றக் கூடிய வாய்ப்பு, ஐயூஎம்எல்-க்கு முதன்முறையாக கிடைத்துள்ளதாக அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.
சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்குச் சேவையாற்றக் கூடிய வாய்ப்பு, ஐயூஎம்எல்-க்கு முதன்முறையாக கிடைத்துள்ளதாக அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் ஐயூஎம்எல் கட்சி எம்எல்ஏவும் அமைச்சருமான ஷாஜகான் பேசியதாவது, "இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் வரலாற்றிலேயே இன்றைய நாள், ஒரு முக்கியமான, திருப்பம் நிறைந்த மற்றும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. இங்கே அமர்வதற்குக் காரணமாக இருக்கக்கூடிய பாபநாசம் தொகுதி மக்களுக்கும், கட்சித் தலைவர் காதர் மொகிதீன் மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றிகள்.
இந்தத் தேர்தலில், மகத்தான மாற்றத்தை எதிர்நோக்கி மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி அமையப் பெற்றிருக்கிறது. இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை அமையக்கூடிய விதத்திலே அவருடைய வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் ஒரு நிலையான நல்லாட்சி அமையப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஐயூஎம்எல் நிபந்தனையற்ற ஆதரவளித்தது.
Advertisement
Advertisement
இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலும் ஐயூஎம்எல் இடம்பெற வேண்டும் என்று தவெக தலைவர்கள் கோரியதால், ஐயூஎம்எல் மாநில நிர்வாகக் குழு கூடி, அமைச்சரவையிலும் பங்கேற்க முடிவெடுக்கப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் நிலையான ஆட்சியும், அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறக் கூடிய வகையில் ஒரு நல்லாட்சி அமையப் பெறுவதும்,
குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தின் குரல் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையிலும்,
சிறுபான்மை சமுதாயம், ஒடுக்கப்பட்ட சமுதாயம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்குச் சேவையாற்றக் கூடிய இந்த வாய்ப்பு, ஐயூஎம்எல்-க்கு முதன்முறையாக கிடைத்துள்ளது.
சமூக நீதி அரசாக, நல்லாட்சி அரசாக, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அரசாக இந்த அரசு செயல்படும்" என்று தெரிவித்தார்.