ஒரு மாதத்திற்குள் தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு! நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் மின்வெட்டு குறித்து நயினார் நாகேந்திரன் பதிவு...
தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க முதல்வர் ஜோசப் விஜய், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு!
Advertisement
Advertisement
தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பிற முக்கியப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த முறை தமிழகத்தை தவிக்க வைத்த திமுக அரசுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போதைய தவெக அரசும் மக்களை இப்படி வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கொளுத்தும் அக்னி வெயிலில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளையும் முதியவர்களையும் படாதபாடு படுத்துவதுதான் தவெக தம்பட்டம் அடித்த மாற்று அரசியலா?
ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, இப்படி மொத்தமாக மாநிலத்தின் மின்சார உபயோகத்தையே தடுத்து நிறுத்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை.
மேலும், தவெக அரசின் இந்த தொடர் மின்வெட்டால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்குவதோடு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க முதல்வர் ஜோசப் விஜய் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உள்ளூர் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பி பழுதுகள் உள்ளிட்ட காரணங்களால் சில பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.