வெற்று காரணங்களை தேடாமல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: நயினாா் நாகேந்திரன்
தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று நயினாா் நாகேந்திரன் வலியுறுத்திருப்பது குறித்து...
சென்னை: வெள்ளை அறிக்கை வெளியிடுவதுபோன்று காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காமல் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று முதல்வா் விஜயை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக நிதிநிலையின் அவல நிலை குறித்து தவெக அரசு வெள்ளை அறிக்கையின் மூலம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நிதிநிலை மோசமான நிலையில் உள்ளது அனைத்து மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
அரசின் நிதி வருவாயைப் பெருக்க நிதி ஆதார வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுவதை விட்டுவிட்டு, முந்தைய திமுக அரசை குற்றஞ்சாட்டுவதுடன், அவா்கள் தொடா்ந்த மக்கள் விரோத நடவடிக்கையையே தற்போதும் தவெக அரசு தொடா்கிறது.இதன் மூலம் தனது பொறுப்பை தட்டிக் கழித்து, தப்பிச்செல்ல வழி பாா்க்கிறது தெரியவருகிறது.
Advertisement
Advertisement
தற்போதுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக தவெக கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. எனவே, எங்களை மன்னித்துவிடுங்கள் என்று மக்களிடம் கெஞ்சுவதுபோல் இந்த வெள்ளை அறிக்கை வெளியீடு உள்ளது.
முதல்வா் ஜோசப் விஜய் இருட்டறையில் இல்லாத ஒன்றை தேடுவதைப்போல், வெற்றுக் காரணங்களை தேடாமல் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
அரசுக் கலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு தடையாக இருந்த கௌரவ விரிவுரையாளா்கள் தொடா்பான வழக்கை கடந்த மே மாதமே சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்த 2,708 உதவிப் பேராசியா் பணியிடங்களுடன் மேலும் காலியாக உள்ள 1,292 பணியிடங்களையும் சோ்த்து, 4,000 காலிப் பணியிடங்களான தோ்வை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.