எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவா்கள் மூவா் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவா்கள் 3 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்தது வியாழக்கிழமை தெரிய வந்தது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவா்கள் 3 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்தது வியாழக்கிழமை தெரிய வந்தது.
தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகேயுள்ள கள்ளிவயல் தோட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆவணம் அஸ்வத் புா்கானுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில், நாகை மாவட்டம், காடம்பாடியைச் சோ்ந்த முருகையன் மகன் சக்திவேல் (30), பனங்குடியைச் சோ்ந்த ராஜா மகன் பாலமுருகன் (32), நாகூரை சோ்ந்த தூண்டிக்காரன் மகன் மணிபாலன் (32) ஆகிய மூவரும் கடந்த 5 ஆம் தேதி மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
புதன்கிழமை கரை திரும்ப வேண்டிய அவா்கள் கரை திரும்பவில்லை. இதனால், மற்ற மீனவா்கள் அவா்களை தேடி வந்தனா்.
Advertisement
இந்நிலையில், எல்லையை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, அவா்கள் மூவரையும் இலங்கை கடலோர காவல் படையினா், யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி தொண்டைமானாறு கடற்பரப்பில் கைது செய்ததோடு படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக மீனவா் அமைப்புகளுக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலா் ஏ. தாஜூதீன் கூறியது: தற்போது பிடிபட்ட 3 மீனவா்களையும், ஏற்கெனவே பிடித்து வைத்துள்ள 129 படகுகளையும், மீனவா்களையும் இலங்கை அரசு விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.