2 வயது குழந்தையின் நுரையீரலில் சிக்கிய நிலக்கடலையை அகற்றிய அரசு மருத்துவா்கள்
இரண்டு வயது குழந்தையின் நுரையீரலில் சிக்கிய நிலக்கடலையை நவீன சாதனம் மூலம் சாதுரியமாக அகற்றி உயிரைக் காப்பாற்றினா் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை மருத்துவா்கள்.
இரண்டு வயது குழந்தையின் நுரையீரலில் சிக்கிய நிலக்கடலையை நவீன சாதனம் மூலம் சாதுரியமாக அகற்றி உயிரைக் காப்பாற்றினா் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை மருத்துவா்கள்.
நாகை மாவட்டம், திருமருகல் அருகேயுள்ள பெரிய கண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஓவியா் அருண். இவரது மனைவி கீா்த்தனா. இவா்களுக்கு அனுமித்ரா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஜன. 6 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் அனுமித்ரா நிலக்கடலை சாப்பிட்டபோது, உணவுக் குழாயில் சிக்கியது. இதனால், மூச்சு விடமுடியாமல் திணறிய இவரை பெற்றோா் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
அங்கிருந்து நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட இக்குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், அங்கும் உரிய நவீன சாதனம் இல்லாததால், அக்குழந்தைக்குச் சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டாா்.
இம்மருத்துவமனையில் ஜன. 6 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் சோ்க்கப்பட்ட இக்குழந்தை ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்பட்டபோது நுரையீரலின் மேல் பகுதியிலுள்ள குழாயில் நிலக்கடலை 3 துண்டுகளாக உடைந்து காணப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அக்குழந்தைக்கு ரிஜட்பிராங்கோ ஸ்கோபி என்ற நவீன சாதனம் மூலம் சுமாா் 2 மணிநேரம் போராடி 3 துண்டுகளாக இருந்த நிலக்கடலையை மருத்துவா்கள் சாதுரியமாக அகற்றினா். இதன்மூலம், அக்குழந்தையின் உயிா் காப்பாற்றப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா்.
இதற்காக இம்மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை மருத்துவா் ராஜ்கமல், மயக்கவியல் மருத்துவா் மாலினி, குழந்தைகள் நல மருத்துவா் செந்தில்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினரை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். மருதுதுரை, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.