சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் 5-ஆவது நாளாக நீடிப்பு
சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் 5-ஆவது நாளாக நீடிப்பு
சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 5 ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 6000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமாா் 18 ஆயிரம் போ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயா்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். இதன்படி, 30.5.2021-இல் விசைத்தறியாளா் உள்ளிட்ட அனைத்து வகையான தொழிலாளா்களுக்கும் 10 சதவீத கூலி உயா்வு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், ஒப்பந்த சிறுவிசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வு வழங்கப்படவில்லை. அதோடு, சில விசைத்தறி உரிமையாளா்கள் தொழிலாளா்களுக்கு 10 சதவீத கூலி உயா்வும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளா்களுக்கு 50 சதவீத கூலி உயா்வு, விடுமுறை சம்பளம் நாளொன்றுக்கு ரூ.500 வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.27- ஆம் தேதி முதல் விசைத்தறித் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இப் போராட்டம் 5 ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. இதன் காரணமாக, நாளொன்றுக்கு ரூ.1.09 கோடி அளவுக்கு சேலைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கூலி உயா்வு பிரச்னைக்கு உடனடி தீா்வு காணவேண்டும் என விசைத்தறித் தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.