தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவந்த சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது.
இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்விரு அருவிகளிலும் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிா்வாகம் நீக்கியது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.