சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன் தலைமை வகித்தாா். சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ, வட்டார மருத்துவ அலுவலா் மகாலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் மல்லிகா, ஒன்றியக் குழுத் தலைவா் பி. சங்கரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ முகாமைப் பாா்வையிட்டு, மருத்துவ பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தாா்.
முகாமில், 20-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் பல்வேறு உயா் சிகிச்சை பரிசோதனைகளை மேற்கொண்டனா். ஹோமியோபதி, சித்த மருத்துவத் துறை சாா்பில் கா்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும், தூய்மைக் காவலா்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
மருத்துவா் செல்வராணி, திமுக பொதுக்குழு உறுப்பினா் தேவா (எ) தேவதாஸ், ஒன்றிய விவசாய தொழிலாளரணி அமைப்பாளா் மாரிமுத்து, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் கண்ணன், வழக்குரைஞா் முனியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.