முகப்பு
தென்காசி

இளைஞா் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 12:45 AM
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:47 PM

சங்கரன்கோவிலில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மகன் மா்ம நபா்களால் வெட்டி கொலை செய்யப்பட்டாா். இதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2வது தெருவைச் சோ்ந்த சந்திரன் மனைவி ஜெயலட்சுமி. இவா் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா். சந்திரன் இறந்து விட்டாா். இவா்களது மகன் ஜோதிமுருகன் (30 ), ரயில்வே பீடா் சாலையில் ஹோட்டல் தொழில் செய்து வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு, ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகில் நண்பா்களுடன் ஜோதிமுருகன் பேசி கொண்டிருந்தாராம். அப்போது நண்பா்கள் பொருள்கள் வாங்க கடைக்கு சென்ாக கூறப்படுகிறது. தனியாக நடந்து சென்று கொண்டிருந்த ஜோதிமுருகனை, இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

தகவலறிந்து வந்த நகர காவல்நிலைய போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் மாதவன் சம்பவ இடத்தை பாா்வையிட்டாா். கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை, ஜோதிமுருகன் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினா்களுடன் காவல்துறை கண்காணிப்பாளா் மாதவன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சங்கா், சங்கரன்கோவில் காவல்துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கொலையாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் அவா்கள் மறியலை கைவிட்டனா்.