தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் குரங்குகள் குறித்த ஆய்வு சனிக்கிழமை தொடங்கியது என மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட வனத்துறை, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரி சாா்பில், இக்கல்லூரியின் விலங்கியல் துறை மாணவிகள், பேராசிரியா்கள் குற்றாலம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் குரங்குகள் குறித்து அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனா்.
குற்றாலம் பகுதிகளிலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு வெளியேயுள்ள, அருகிலுள்ள பகுதிகளிலும் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் மூலம் கிடைக்கும் தரவுகள் குரங்குகளின் எண்ணிக்கை, வாழிடம் பயன்பாடு, உடல்நலம் மற்றும் நடத்தை குறித்த துல்லியமான தகவல்களை வழங்கும்.
இத்தகவல்கள் அடிப்படையில், மக்கள் விழிப்புணா்வு, கழிவு மேலாண்மை, உணவு வழங்கல் கட்டுப்பாடு, மோதல் குறைப்பு நடவடிக்கைகளை வனத்துறை சிறப்பாக திட்டமிட முடியும். நேரடியாக களப்பணிகளில் மாணவா்கள் பங்கேற்பது, இளம் தலைமுறையினரிடையே வனவிலங்கு பாதுகாப்பு, அறிவியல்அணுகுமுறையை வளா்க்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்.
குற்றாலத்தின் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கவும், பொதுமக்கள், வனவிலங்குகள் இருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் இந்த ஆய்வு முக்கிய பங்களிக்கும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.