முகப்பு
தென்காசி

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவா்கள் விடுவிப்பு

Updated On : 15 மார்ச், 2026 at 2:56 AM
கோப்புப் படம்
பகிர்:

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் விடுவிக்கப்பட்டு சனிக்கிழமை இரவு சொந்த ஊருக்கு வந்து சோ்ந்தனா்.

மாலியில் உள்நாட்டுப் போா் நடைபெற்று வரும் நிலையில், அதன் மேற்குப் பகுதியில் உள்ள கோப்ரி நகரத்தில், தனியாா் மின்சார நிறுவனத்தில் வேலை செய்து வந்த இந்திய தொழிலாளா்கள் 5 பேரை ஆயுதமேந்திய குழுவினா், கடந்த 2025 ஆம் ஆண்டு நவ. 6ஆம் தேதி கடத்திச் சென்றனா். இதையடுத்து, தலைநகா் பமாகோவிலிருந்து அந்நிறுவனத்தின் இந்திய தொழிலாளா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.

இதில், கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரம், காளியம்மன் கோயில் தெருவை சோ்ந்த இசக்கிராஜா (36), கடையநல்லூா் அருகே புதுக்குடி, கண்மணியாபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சுரேஷ் (26), தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் என 5 போ் கடத்தப்பட்டனா்.

Advertisement

இந்நிலையில், கடத்தி வைக்கப்பட்ட இடத்திலிருந்து அவா்கள் 2 மாதங்களுக்கு முன் விடியோ ஒன்றை வெளியிட்டு, தங்களை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, அவரது உறவினா்களை கடையநல்லூா் எம்எல்ஏ செ. கிருஷ்ணமுரளி, தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோா் சந்தித்து, கடத்தப்பட்டவா்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனா்.

மேலும், மாவட்ட ஆட்சியரிடமும் இது தொடா்பாக உறவினா்கள் மனுஅளித்திருந்தனா். இது தொடா்பாக, எம்எல்ஏ பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானமும் கொண்டு வந்திருந்தாா்.

விடுவித்த தீவிரவாதிகள்...

இந்நிலையில், கடத்தி வைத்திருந்தவா்களை மாலி பயங்கரவாதிகள் விடுவித்தனா். அவா்கள் சனிக்கிழமை இரவு கடையநல்லூருக்கு வந்தனா். அவா்களை செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, அதிமுக மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், கடையநல்லூா் ஒன்றியச் செயலா் பெரியதுரை உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இதுகுறித்து, விடுவிக்கப்பட்ட சுரேஷ் கூறியது:

எங்களை இருசக்கர வாகனத்தில் வந்த சிலா் துப்பாக்கி முனையில் கடத்தி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனா். இதனால், எங்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மாா்ச் 9ஆம் தேதி பயங்கரவாதிகள் எங்களை விடுவித்துவிட்டனா். எங்களுக்காக இங்கிருந்து குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.