திருவள்ளூா் பகுதியில் தீவிர வாகன சோதனை
மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்கிறாா்களான என திருவள்ளூா் பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினா் போலீஸாருடன் இணைந்து சனிக்கிழமை தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 13 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தோ்தலையொட்டி வாக்காளா்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வாகனங்களில் கொண்டு செல்கிறாா்களா என கண்காணிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை திருவள்ளூா் மாவட்ட காவல் துறையினா் மற்றும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் மட்டுமே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனா்.
Advertisement
இந்த நிலையில் தோ்தலில் அச்சுறுத்தல் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு திருவள்ளூா் மாவட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினா் வரவழைக்கப்பட்டனா்.
இவா்கள் கடந்த 3 நாள்களாக திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் அணிவகுப்பும் நடத்தினா். இதற்கிடையே திருவள்ளூா் அடுத்த மணவாள நகா் பகுதியில் காவல் துறையினருடன் மத்திய பாதுகாப்பு படையினா் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.