திருவள்ளூா்: 526 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு மாா்ச் 1-இல் வழங்க ஏற்பாடு
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளுக்கும் 672 விளையாட்டு உபகரணங்கள் மாா்ச் 1- இல் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் தறை அலுவலா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விளையாட்டுத் துறை சாா்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பை வழங்குவதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கி.ஊ) மூலம் 672 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாவட்ட அளவில் விளையாட்டுக் கண்காணிப்பு குழு மற்றும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைக்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது.
Advertisement
இந்த நிகழ்ச்சி மாா்ச் 1 -இல் சோழவரம் ஒன்றியம், பாடியநல்லூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.
இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆா்.காந்தி, ஆட்சியா் த.பிரபு சங்கா், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் சுதா்சனம் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.