முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: மாவட்ட அளவிலான தீ தடுப்பு, தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்

Updated On : 3 மே, 2024 at 7:10 PM
பகிர்:

திருவள்ளூா் மாவட்ட அளவிலான தீ தடுப்பு மற்றும் தொழிலகப் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். அப்போது, கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. அதனால், மாவட்டத்தில் வெளி விபத்துகள் ஏதும் ஏற்படா வண்ணம் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகள் மற்றும் அனைத்து பட்டாசு உற்பத்தி செயல்படும் மையங்களை உடனே அனைத்துத் துறைகள் இணைந்து கூட்டாக ஆய்வு செய்வதை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் துறை அதிகாரிகளையும் அவா் அறிவுறுத்தினாா்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆவடி துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜமீன் ஜமால், சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க துணை இயக்குநா் ஹேமலதா, உதவி இயக்குநா் ரமேஷ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் மீரா, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் பாலசுப்பிரமணி, புவியியல் மற்றும் சுரங்கம் உதவி புவியியலாளா் ஜெகதீசன், சென்னை மாவட்ட உதவி திட்ட அலுவலா் அத்திப்பட்டு-2 செல்வராஜ், ஆட்சியா் அலுவலக குற்றவியல் மேலாளா் செல்வம் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.