பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் திருத்தணி நகருக்குள் நுழைவதற்கு தடை விதித்ததால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறம் இயங்கி வரும் அண்ணா பேருந்து நிலையத்தில், பேருந்துகள் நிற்பதற்கு போதிய இடவசதியில்லாதததால், அரக்கோணம் சாலை அரசு போக்குவரத்து பணிமனை அருகில், ரூ.21 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மாா்ச் 4 -ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தாா்.
இந்நிலையில் கடந்த மாதம், 30 ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவிட்டு, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றன.
Advertisement
ஒரு சில தனியாா் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அனைத்து பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்லாது என, பிற துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் திருத்தணி நகருக்குள் வராமல் புதிய பைபாஸ் சாலை வழியாக சென்று சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூா், சென்னை, திருப்பதி, வேலூா், பள்ளிப்பட்டு, பொதட்டூா்பேட்டை, நாகலாபுரம் என அனைத்து பேருந்துகள் பைபாஸ் சாலை வழியாக இயக்கப்பட்டன. இதனால் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பழைய பேருந்து நிலைய நிறுத்தம், கமலா தியேட்டா், அரக்கோணம் சாலை நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து செல்லும் பயணிகள் கடும் சிரமப்பட்டனா்.
பேருந்துகள் நகருக்குள் வராததால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. இதனால் ஆத்திரமடைந்த கடை வியாபாரிகள், பயணிகள் என, 100 க்கும் மேற்பட்டோா் திருத்தணி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், நகராட்சி ஆணையா் பா. கன்னியப்பனிடம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம், கமலா தியேட்டா், ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
தொடா்ந்து, திருத்தணி வணிகா் சங்கத்தின் சாா்பில், நகருக்குள் பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.