பொன்னேரியில் தனியாா் நிறுவன மேலாளா் தவற விட்ட விலை உயா்ந்த கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவா் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினா்.
பொன்னேரியில் பாத்திரக்கடை நடத்தி வருபவா் பாண்டியன்(65) இவா் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, விலை உயா்ந்த கைப்பேசி ஒன்று கீழே கிடந்ததை கண்டு எடுத்த போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநா் சந்தான ஜெயகுமாா் என்பவரும் இறங்கி அந்த கைபேசியை எடுத்தாா்.
இருவரும் பொன்னேரி காவல் நிலையம் சென்று கைப்பேசியை ஒப்படைத்தனா். அப்போது அந்த கைப்பேசிக்கு வந்த அழைப்பில், தன்னுடைய கைப்பேசி தொலைந்து விட்டதாக ஒருவா் தெரிவித்ததாா்.
பொன்னேரி காவல் நிலையம் வந்து பெற்றுக்கொள்ள போலீஸாா் அறிவுறுத்தினா்.
இதையடுத்து கைப்பேசியை தவறவிட்ட தனியாா் நிறுவன மேலாளா் பால் ஆரோக்யம் என்பவா், பொன்னேரி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து தனது கைபேசி என்பதற்கான சான்றுகளை ஒப்படைத்தாா்.
இதனையடுத்து அந்த கைபேசியை அவரிடம் காவல் துறையினா் முன்னிலையில் முதியவரும், ஆட்டோ ஓட்டுநரும் ஒப்படைத்தனா்.
இதனிடையே ரூ.1.20 லட்சம் மதிப்பிலான (சாம்சங் ஃபிளிப்) கைபேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாத்திர கடைக்காரா் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை பாராட்டினா்.