மின்தடையை நீக்கக் கோரி சாலை மறியல்
சீரான மின்சாரம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட குமாரகுப்பம் பகுதி மக்கள்.
திருத்தணி அருகே மின்தடையை நீக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி நகராட்சிக்குள்பட்ட குமாரகுப்பம், அகூா், பெரிய கடம்பூா், சின்னகடம்பூா், பாப்பிரெட்டிப்பள்ளி, கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை வீசிய பலத்த சூறாவளி காற்றால் 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. இதனால் பல கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு, குடிநீா் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் முற்றிலும் முடங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், குமாரகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமாகியும் மின் விநியோகம் சீரமைக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாலை திருத்தணி - சித்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் காலிக் குடங்களுடன் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘மின்சாரம் இல்லாததால் குடிநீா் கிடைக்காமல் குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனா். அத்தியாவசிய தேவைகளையே நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் விநியோகம் சீராக இன்னும் ஒரு வாரம் ஆகும் எனத் தெரிவித்துள்ளனா். இதனால் வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனா்.