'டியாஜியோ' வழங்கவிருந்த வேலைநீக்க ஊதியத்தை பெற மல்லையாவுக்கு தடை
இங்கிலாந்தைச் சேர்ந்த டியாஜியோ நிறுவனம் பிரபல தொழிலபதிருமான விஜய் மல்லையாவுக்கு வழங்கவிருந்த ரூ.515 கோடி வேலைநீக்க ஊதியத்தைப் பெற தடை விதித்து கடன் மீட்புத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த டியாஜியோ நிறுவனம் பிரபல தொழிலபதிருமான விஜய் மல்லையாவுக்கு வழங்கவிருந்த ரூ.515 கோடி வேலைநீக்க ஊதியத்தைப் பெற தடை விதித்து கடன் மீட்புத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா, தான் ஏற்கெனவே நடத்திவந்த கிங்ஃபிஷர் நிறுவனத்துக்காக 17 வங்கிகளின் கூட்டிணைவாக விளங்கும் பாரத ஸ்டேட் வங்கியிடம் (எஸ்பிஐ) ரூ.7 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார்.
இந்த கடன் தொகையை அடைக்குமாறு விஜய் மல்லையாவுக்கு பலமுறை அறிவுறுத்தியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்பதால், கடன் தொகையை மீட்டுத் தரக் கோரி பெங்களூரில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் (டிஆர்டி) பாரத ஸ்டேட் வங்கி வழக்கு தொடர்ந்தது. மேலும், விஜய் மல்லையாவைக் கைது செய்யவும், அவரது கடவுச்சீட்டை முடக்கவும், கடனை அடைக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் 3 மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
Advertisement
இதனிடையே, மதுபானம் தயாரிக்கும் நிறுவனமான யூபி குழுமத்தின் ஆற்றுநராக இருந்துவரும் விஜய் மல்லையா, அந் நிறுவனத்தில் இருந்து வேலைநீக்கம் செய்யப்படுவதற்காக, இந் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டியாஜியோ மதுபான நிறுவனம் 75 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.515 கோடி) ஊதியமாக வழங்குவதாக கடந்த மாதம் அறிவித்தது.
இந்த தொகையை விஜய் மல்லையாவுக்கு வழங்காமல், கடன் மீட்பு வழக்கில் இணைக்க வேண்டுமென்று பாரத ஸ்டேட் வங்கி மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை முன்னுரிமை அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் தலைவர் சி.ஆர்.பெனகனஹள்ளி, இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு இன்று தீர்ப்பு வழங்கினார்.
டியாஜியோ நிறுவனம் வழங்குவதாக உறுதி அளித்துள்ள ரூ.515 கோடி வேலைநீக்க ஊதியத்தை விஜய் மல்லையாவுக்கு வழங்கத் தடை விதித்துள்ளதோடு, அந்தத் தொகையைப் பெறக் கூடாது என்று விஜய் மல்லையாவுக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த தொகையை தீர்ப்பாயத்தில் செலுத்துமாறு டியாஜியோ நிறுவனத்துக்கும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.