இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 37% அதிகரிப்பு
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை இரண்டாம் காலாண்டில் 37 சதவீதம் அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை இரண்டாம் காலாண்டில் 37 சதவீதம் அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
நடப்பு 2017-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 167.4 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் காணப்பட்ட தேவையான 122.1 டன்னுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம். மதிப்பின் அடிப்படையில் இதற்கான தேவை ரூ.33,090 கோடியிலிருந்து 32 சதவீதம் அதிகரித்து ரூ.43,600 கோடியாக இருந்தது.
இருப்பினும், ஐந்தாண்டு கால சராசரியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் தங்கத்துக்கான தேவை குறைந்தே காணப்பட்டது. ஜிஎஸ்டி எதிரொலியாக இரண்டாம் காலாண்டு இறுதியில் தங்க விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. ஒரு சதவீத உற்பத்தி வரியை எதிர்த்து நகை வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டின் இதே கால அளவில் ஆபரண விற்பனை பாதிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 650-750 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டில் ஆபரணங்களுக்கான தேவை 89.8 டன்னிலிருந்து 41 சதவீதம் அதிகரித்து 126.7 டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் இதற்கான தேவை ரூ.24,350 கோடியிலிருந்து 36 சதவீதம் அதிகரித்து ரூ.33,000 கோடியாக காணப்பட்டது.
முதலீட்டு நோக்கிலான தங்கத்துக்கான தேவை 26 சதவீதம் உயர்ந்து 40.7 டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.8,740 கோடியிலிருந்து 21 சதவீதம் அதிகரித்து ரூ.10,610 கோடியானது.
உலக அளவில் தங்கத்துக்கான தேவை இரண்டாம் காலாண்டில் 10 சதவீதம் சரிந்து 953 டன்னாக இருந்தது. தங்கத்தின் அடிப்படையிலான கடன் பத்திரங்களான ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு குறைந்து போனதையடுத்து இந்த நிலை ஏற்பட்டது என்றார் அவர்.