18.3.1976: பாடநூல்கள் தணிக்கைக்கு குழு - கட்சி சார்பு பகுதிகள் நீக்கப்படும்
பாடநூல்கள் தணிக்கைக்கு குழு பற்றி...
சென்னை, மார்ச். 17 - தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாட நூல்களையும் இனி வெளியிடப்படவிருக்கும் பாட நூல்களையும் தணிக்கை செய்ய ஒரு குழு அமைக்கப்படும். இந்த நூல்களில் கட்சி சாயல் உள்ளனவா என்பது பற்றியும் அவற்றை நீக்குவது குறித்தும் குழு ஆராயும் என்று மாநில கவர்னர் கே.கே. ஷா நிருபர்களிடம் தெரிவித்தார்.
பாட நூல்கள் கல்வி அறிவு வளர்ச்சியைப் பிரதானமாகக் கொண்டதாக இருக்க வேண்டுமேயொழிய எந்த கட்சிச் சாயல் அல்லது சார்பு கொண்ட கருத்துக்களுக்குப் பாடப்புத்தகங்களில் இடமிருக்கலாகாது என்று ஷா சொன்னார். ஒரு கட்சி சாயல் அல்லது சார்புடைய கருத்துக்கள் பாட நூல்களில் இடம் பெற்றிருக்குமே ஆனால் அவை கல்வி நலனுக்கு உகந்தவை ஆகாது. எனவே அது போன்ற பகுதிகள் அகற்றப்பட வேண்டியவையே என்றும் கவர்னர் கருத்துத் தெரிவித்தார். ஏற்கனவே வெளிவந்துள்ள, இனி வெளிவர இருக்கிற பாடப் புத்தகங்களை இக்குழு தணிக்கை செய்யும் என்றார்.
இதன் காரணமாக வருகிற கல்வி ஆண்டில் பாடப் புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொண்டு குழுவின் பணி முடிக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு, இந்த அம்சமும் முக்கிய கவனத்தில் கொள்ளப்படும் என்று கவர்னர் பதிலளித்தார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், அரசு ஊழியர்கள் கட்சி சார்பற்றவர்களாகப் பணியாற்ற வேண்டும் என்றார். சில ஊழியர்கள் கட்சி சார்புபற்றி ஏராளமான புகார்கள் வருகின்றன. குறிப்பிட்ட துறையில் எந்த அதிகாரி அல்லது அரசு அலுவலாளர் கட்சி சார்புடன் நடந்து கொண்டார் என்று குறிப்பான ஆதாரங்களுடன் தகவல் தந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்றும் ஷா கேட்டுக் கொண்டார்.
அதிகாரிகளும் அரசு அலுவலாளர்களும் அரசியல் கட்சி சார்புடையவர்களாக நடந்து கொள்வது குற்றமாகும். அரசியல் கட்சி சார்புடையவர்களுடன் அதிகாரிகள் தொடர்பு கொள்வது பொது நிர்வாக நலனுக்குக் குந்தகம் விளைவிப்பதாகும். அரசுப் பணியில் இருக்கும் போது அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்வது குற்றம் என நான் கருதுகிறேன். அப்படி எவரேனும் வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட புகார் வருமானால் அதன் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புற நோயாளிகளுக்காக சென்னை நகரில் 4 மருத்துவ நிலையங்கள் ஏற்படும்
சென்னை, மார்ச். 17 - சென்னை, ஜெனரல் ஆஸ்பத்திரியில் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தின் அடிப்படையில், நகரில் நான்கு இடங்களில் புற நோயாளிகளுக்கு (அவுட் பேஷண்ட்) அற்ப சொற்ப வியாதிகளுக்காகச் சிகிச்சை அளிக்க மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவற்றில் ஒன்று வருகிற மே மாத வாக்கில் கலைஞர் கருணாநிதி நகரில் திறக்கப்படும்.
நந்தனம்-தேனாம்பேட்டை பகுதியில் இன்னொரு மருத்துவமனை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், 1977 மார்ச் 31-ம் தேதிக்குள் (அடுத்த ஆண்டு நிதி முடிவுக்கும்) வட சென்னையில் இரண்டு இடங்களிலும் இது போன்ற மருத்துவ நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.