முகப்பு
தினமணி கதிர்

சாவித்திரி - நான் சந்தித்த பிரபலங்கள் - 53

சாவித்திரி பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

Updated On : 12 ஏப்ரல், 2026 at 4:01 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:33 PM

சாவித்திரி பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

அழகு, நடிப்பு, திறமை எல்லாம் ஒன்று சேர்ந்து, 'நடிகையர் திலகம்' என்று பாராட்டப்பட்ட சாவித்திரி, ஆந்திரத்தில் உள்ள சீர்ரவுரு என்ற கிராமத்தில் குருவய்யாவுக்கும் நிஜங்கரா சுபத்ராமாவுக்கும் 1934-டிசம்பர் 6-இல் பிறந்தார்.

இவர் பிறந்த ஆறு மாதங்களில் தந்தையை இழந்தார். மாமா, அத்தையின் அரவணைப்பில் வளர்ந்து சிறுவயதிலேயே நாட்டிய நாடகங்களில் நடித்தார். வானொலியிலும் பாடினார். பிரபல பாலிவுட் நடிகர் பிருத்விராஜ் கபூருடன் நடித்தார்.

Advertisement

சென்னை வந்து நடிக்க முயற்சி செய்து ஏமாற்றமடைந்து திரும்பி கிராமத்துக்கே சென்றவரை ஒருவர் தேடி வந்து சினிமாவில் நடிக்க அழைத்துப் போனார். அவர்தான் ஜெமினி கணேசன். அவரையே காதலித்து மணந்து இரண்டு குழந்தைகளின் தாயானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று 14 வயதிலேயே கதாநாயகியாகி 'தேவதாஸ்', 'மிஸ்ஸியம்மா', 'பாசமலர்', 'கை கொடுத்த தெய்வம்', 'நவராத்திரி' என்ற மறக்க முடியாத காவியங்களில் நடித்தார். 'தி வுமன் அமாங் ஸ்டார்ஸ்' என்று அனைத்துலகத் திரைப்பட விழாவில் 1999-இல் பாராட்டப் பெற்றார். 2011-இல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது. இவர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கியபோது அதில் கீர்த்தி சுரேஷ் நடித்தார்.

நான் 1967-இல் ஜெமினி, பாலாஜி, பானுமதி நடித்து ஏ. பீம்சிங் தயாரிப்பில் எஸ். ராமநாதன் இயக்கத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தபோது ஒருநாள் ஓஷியானிக் ஹோட்டலில் இரவு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு காரை ஓட்டிக் கொண்டு வந்த சாவித்திரி, பாலாஜியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

நான் 'ஷாட் ரெடி' என்று பாலாஜியைக் கூப்பிடப் போனபோது, அங்கு வந்த புரொடக்ஷன் பையன் தவறுதலாக என் வேட்டி முழுக்க காபியைக் கொட்டி விட, எனக்கு ஒரு கைலியைத் தந்தார்கள்.

நான் கைலியுடன் படப்பிடிப்பில் வேலை செய்தேன். இதைப் பார்த்த ஜெமினி, 'காரைக்குடி நாராயணனை சாவித்திரி காதர் பாய் நாராயணன் ஆக்கி விட்டார்' என்று கேலி செய்தார்.

1971-இல் என். எஸ். என். தியேட்டர்ஸýக்காக எழுதிப் பிரபலமான நாடகம் 'அச்சாணி'. இதில் மேஜர், சிவகுமார் நடித்தார்கள். இந்த நாடகம் நடக்கும் போது இரண்டு மூன்று தடவை சாவித்திரி என் நாடகத்தைப் பார்க்க வந்தார். மேஜர் என்னை அறிமுகம் செய்தார். சாவித்திரி என்னைப் பாராட்டினார். 'பீம்சிங் அசிஸ்டெண்ட்' என்றார். சாவித்திரி 'அப்படியா!' என்றார்.

என்னை மறந்து விட்டார் என்று புரிந்துகொண்ட நான், அவர் எனக்கு தீபாவளிக்கு அவர் வீட்டில் ஸ்வீட் பாக்கெட் தந்ததையும், ஓஷியானிக் ஹோட்டலில் கைலியுடன் பணிபுரிந்ததையும் நினைவுபடுத்தினேன். அடுத்த நொடியே அவர் சிரித்தபடி 'காரைக்குடி காதர் பாயா?' என்றார்.

என் மனம் மகிழ்ச்சி அடைந்தது. உடனே என்னிடம், 'நல்ல குடும்பக் கதையாக நாடகம் எழுதிக் கொடுங்கள். நான் நாடகம் நடிக்க ஆசைப்படுகிறேன்' என்றார்.

எம்.ஜி.ஆர். 1958-இல் 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலைத் திரைப்படமாக்க நினைத்தபோது நட்சத்திரப் பட்டாளங்களோடு இவரை பூங்குழலியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். பல காரணங்களால் அது நடக்காமல் போக 'பரிசு', 'வேட்டைக்காரனில்' நடித்தார்.

பிறர்க்கு உதவும் குணமுடைய இவர், பலரால் பல பழக்க வழக்கங்களால் சிதைந்த சித்திரமானார். சிவாஜி எத்தனை சொல்லியும் கேட்காமல் இயக்குநராய், தயாரிப்பாளராய் ஆனார்.

கடைசியாக இவரை நானும் மேஜரும் அண்ணா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்த போது தாமரையாக வாழ்ந்தவர் வாடிப் போய் வைக்கோல் கன்றுக்குட்டியாக இருந்தார்.

திரையுலகின் பௌர்ணமியாக இருந்தவர் எரிநட்சத்திரமாகி தன் 41-ஆவது வயதில், 1981, டிசம்பர் 26-இல் காலமானார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.