பங்குச் சந்தைகள் 5 மாதங்களில் இல்லாத ஏற்றம்
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்கதினமான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் 5 மாதங்களில் இல்லாத ஏற்றத்தைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்கதினமான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் 5 மாதங்களில் இல்லாத ஏற்றத்தைக் கண்டது.
அமெரிக்கா-சீனாஇடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரிலிருந்து முதலீட்டாளர்களின் கவனம் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளை நோக்கி திரும்பியுள்ளது. இருந்தபோதிலும், சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட சாதகமான நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வலுவடைந்தது ஆகியவை பங்கு வர்த்தகத்துக்கு வலு சேர்க்கும் காரணிகளாக
அமைந்தன.
எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 1.46 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 1.46 சதவீதமும், மின்சாரம் 1.32 சதவீதமும், உலோக துறை குறியீட்டெண் 1.24 சதவீதமும் உயர்ந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 1.96 சதவீதம் அதிகரித்து ரூ.995.65-ஆனது. தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் பங்கின் விலை 1.14 சதவீதம் உயர்ந்து ரூ.1,299.15-ஆனது.
டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி தொடர்ந்த வழக்கை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. டாடா சன்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதையடுத்து டாடா குழும நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 0.81 சதவீதமும், டாடா ஸ்டீல் 0.49 சதவீதமும், டாடா பவர் 2.09 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், டிசிஎஸ் நிதி நிலை முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) வெளியாவதையொட்டி முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதால் அந்நிறுவனப் பங்கின் விலை 1.34 சதவீதம் சரிவைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 276 புள்ளிகள் அதிகரித்து 35,934 புள்ளிகளில் நிலைத்தது. இது ஜனவரி 31-க்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும். தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 10,852 புள்ளிகளில் நிலைத்தது.