சில்லறைப் பணவீக்கம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவீதமாக அதிகரித்தது.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
சில்லறை விலை அடிப்படையிலான பொருள்களுக்கான பணவீக்கம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவீதமாக சற்று அதிகரித்தது. முந்தைய ஜூலை மாதத்தில் இது 3.15 சதவீதமாக காணப்பட்டது.
உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் கண்டதையடுத்து இந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அளவில்தான் பணவீக்கம் இன்னும் உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள்கள் அடங்கிய பிரிவுக்கான பணவீக்கம் 2.36 சதவீதத்திலிருந்து 2.99 சதவீதமாக அதிகரித்தது.
நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் 3.69 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் நிதிக் கொள்கையை உருவாக்குவதில் சில்லறைப் பணவீக்கம் முக்கிய காரணியாக உள்ளது. இந்த பணவீக்கத்தை 4 சதவீத அளவுக்குள் வைத்திருக்கும்படி மத்திய அரசை, ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.