வாட்ஸ்ஆப்பை ஒரே நேரத்தில் ஐந்து சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய சமூக ஊடகமாக வாட்ஸ்ஆப் திகழ்கிறது. அடிக்கடி பயனாளர்களுக்கு புதிய அப்டேட் வழங்குவதையும் வசதிகளை அறிமுகப்படுத்துவதையும் வாட்ஸ்ஆப் வழக்கமாக கொண்டுள்ளது.
தற்போது, ஒரு அசத்தலான வசதியை அறிமுகப்படுத்தி பயனாளர்களை மிரளவைத்துள்ளது. தற்போது, செல்லிடப்பேசியை டெஸ்க்டாப்பில் இணைத்து பயனாளர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்திவருகின்றனர்.
புதிய வசதியின்படி, இனி, ஒரே நேரத்தில் போனை தவிர்த்து நான்கு சாதனங்களின் வாட்ஸ்ஆப்பை இணைத்து பயன்படுத்தலாம். அதேபோல், செல்லிடப்பேசியின் சார்ஜ் காலியானாலும் இணைத்து வைத்திருக்கும் சாதனங்கள் மூலம் வாட்ஸ்ஆப் வசதியை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ்ஆப் தங்களது பேஸ்புக் பக்கத்தில், "செல்லிடப்பேசியை இணைக்காமலேயே வாட்ஸ்ஆப்பை மற்ற சாதனங்களில் பயன்படுத்தலாம். எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் வசதியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
பயனாளர்கள் இருவர் வாட்ஸ்ஆப்பில் மேற்கொள்ளும் உரையாடலை வேறு யாரும் காண முடியாது. இதுவே, எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் வசதி எனப்படும்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதியானது இன்னும் சோதனை கட்டத்தில்தான் உள்ளது. எனவே, பயனாளர்கள் இந்த வசதியை இப்போதைக்கு பயன்படுத்த முடியாது. பீட்டா வெர்ஷன் பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைக்கு பிறகு, அனைத்து பயனாளர்களுக்கும் இது விரிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.