முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் மேலும் 383 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்களுக்கு ரூ.3.16 லட்சம் கோடி லாபம்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான

Updated On : 22 ஜூலை, 2025 at 9:52 AM
பகிர்:

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 383 உயர்ந்து 61,350-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையில் ஒரு கட்டத்தில் எதிர்மறையாகச் சென்றாலும், பிற்பகலில் மீட்சி பெற்றது. சந்தை மதிப்பு ரூ.3.16 லட்சம் கோடி உயர்ந்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் சரிவைச் சந்தித்த நிலையில், பிற்பகல் வர்த்தகத்தில் குறைந்த நிலையில் இருந்து மேலே சென்றது. ஆட்டோ, மெட்டல், ரியால்ட்டி பங்குகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பால் சந்தை ஏற்றம் கண்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 மேலும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் வெகுவாக உயர்ந்து சந்தைக்கு ஆதரவாக இருந்தன. தற்போதைய நிலையில் சந்தை இன்னும் மேலே செல்வதற்கான அறிகுறிகள் இருந்தாலும், வரும் நாள்களில் வெளியாகும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அறிவிப்புகள்தான் அடுத்த கட்ட நகர்வை முடிவு செய்யும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 2,218 நிறுவனப் பங்குகள் ஆதாயம்: பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,419 நிறுவனப் பங்குகளில் 2,218 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,056 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 145 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 164 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 27 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 333 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 206 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.16 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.265.36 லட்சம் கோடியாக இருந்தது.
 மும்பை பங்குச் சந்தையில் பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,42,41,860-ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், தேசிய பங்குச் சந்தையில் பதிவு பெற்ற முதலீட்டாளர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 5 கோடியை தாண்டியுள்ளது.
 மேலும் ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் 30.85 புள்ளிகள் கூடுதலுடன் 60,997.90-இல் தொடங்கி, 60,791.29 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 61,497.71 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 383.21 புள்ளிகள் (0.63 சதவீதம்) கூடுதலுடன் 61,350.26-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் எதிர்மறையாக சென்றது.
 டாடா ஸ்டீல் அபாரம்:
 சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 20பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை 3.92 சதவீதம், டைட்டன் 3.20 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏஷியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை 1.50 முதல் 3 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
 இன்டஸ்இண்ட் பேங்க் சரிவு: அதேசமயம், பிரபல தனியார் வங்கியான இன்டஸ்இண்ட் பேங்க் 1.92 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐசிஐசிஐ பேங்க், பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.
 நிஃப்டி 143 புள்ளிகள் உயர்வு:
 தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,388 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 433 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 18,154.50-இல் தொடங்கி, 18,099.30 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 18,310.45 வரை உயர்ந்த நிஃப்டி, இறுதியில் 143.00 புள்ளிகள் (0.79 சதவீதம்) உயர்ந்து 18,268.40-இல் நிலைபெற்றது.
 திங்கள்கிழமை பலத்த அடி வாங்கிய நிஃப்டி ரியால்ட்டி குறியீடு, செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 3.62 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆட்டோ, கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், மெட்டல், மீடியா குறியீடுகள் 2 முதல் 2.70 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆனால், பிரைவேட் பேங்க் குறியீடு மட்டும் சிறிதளவு சரிவைச் சந்தித்தது. நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடுகளும் 2.50 சதவீதம் ஏற்றம் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments