முகப்பு
வணிகம்

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 55 புள்ளிகள் ஏற்றம்

 பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.  

Updated On : 22 ஜூலை, 2025 at 9:52 AM
பகிர்:

பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலையில் வர்த்தகம் பலவீனமாகத் தொடங்கினாலும், கடைசி நேரத்தில் பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 55 புள்ளிகள் உயர்ந்து 58,305-இல் நிலைபெற்றது.

கடந்த சில நாள்களாக உலகளாவிய சந்தைகளில் வர்த்தகம் செய்வது இடர்பாடு நிறைந்ததாக இருந்து வருகிறது. அதன் தாக்கத்தால் இந்திய சந்தைகளிலும் உற்சாகமில்லாத நிலை தொடர்கிறது. இந்த நிலையில், பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் பலவீனத்துடன் தொடங்கி தள்ளாட்டத்தில் இருந்ததாக பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எச்சரிக்கை: இதற்கிடையே, இந்த ஆண்டு பெரிய நிறுவனப் பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளன. இதனால், இந்தப் பங்குகளில் எந்த நேரத்திலும் ஒரு திருத்தம் இருக்கக்கூடும் என்று நிபுணர்களிடையே ஒரு கருத்து இருந்து வருகிறது. இதனால், கைவசம் உள்ள பணத்தின் ஒரு பகுதி, பொதுத் துறை வங்கிப் பங்குகள் உள்ளிட்டவற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. இருப்பினும், இது ஒரு குறுகிய கால வாய்ப்பாகத்தான் இருக்கும். எனவே, வர்த்தகர்கள் வரும் நாள்களில் மிகுந்த ஜாக்கிரதையுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

Advertisement

சந்தை மதிப்பு ரூ.90 ஆயிரம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,350 பங்குகளில் 1,844 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,345 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 161 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 196 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 363 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 168 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.90 ஆயிரம் கோடி உயர்ந்து ரூ.255.58 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 7,90,08,423-ஆக உயர்ந்துள்ளது.

கடைசி நேரத்தில் உற்சாகம்:

சென்செக்ஸ் காலையில் 77.28 புள்ளிகள் குறைந்து 58,172.98 -இல் தொடங்கி, 58,084.99 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 58,334.59 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 54.81 புள்ளிகள் (0.09 சதவீதம்) கூடுதலுடன் 58,305.07-இல் நிலைபெற்றது. காலை வர்த்தகத்தின் போது 165.27 புள்ளிகளை இழந்து தள்ளாடிய சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் முன்னணிப் பங்குகளை வாங்குவதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நேர்மறையாக முடிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

பார்தி ஏர்டெல், நெஸ்லேஅபாரம்:

சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 2.77 சதவீதம், முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனமான நெஸ்லே 2.39 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக், ஐடிசி உள்ளிட்டவை 0.70 முதல் 1.25 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும்
டிசிஎஸ், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, மாருதி சுஸýகி, இன்டஸ்இண்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

டைட்டன் சரிவு:

அதே சமயம், டைட்டன் 0.97 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம் உள்ளிட்டவை 0.50 முதல் 0.80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலுக்கு வந்தன.


நிஃப்டி 16 புள்ளிகள் உயர்வு:

தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 975 பங்குகள் ஆதாயம் பெற்றன. 807 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 15.75 புள்ளிகள் (0.09 சதவீதம்) உயர்ந்து 17,369.25-இல் நிலைபெற்றது. காலையில் 17,353.50-இல் பலவீனத்துடன் தொடங்கிய நிஃப்டி, மேலும் குறைந்து 17,302.70 வரை கீழே சென்றது. பின்னர் அதிகபட்சமாக 17,379.65 வரை உயர்ந்தது.
ரியால்ட்டி குறியீடு 3 சதவீதம்

உயர்வு:

நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி மீடியா குறியீடு 3 சதவீதம் வரை உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மெட்டல், எஃப்எம்சிஜி குறியீடுகள் 0.80 சதவீதம் உயர்ந்தன. ஆனால், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. அதே சமயம், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 0.27 சதவீதம் உயர்ந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments