தள்ளாட்டத்துக்கிடையே முன்னேற்றம் கண்ட சென்செக்ஸ்
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் பெரிய அளவில் மேலே செல்ல வழியின்றி 21 புள்ளிகள் மட்டுமே உயர்ந்தது.
புவிசார் அரசியல் கவலைகள் அதிகரித்ததன் காரணமாக உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாமல் இருந்தது. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் தொடக்கத்திலேயே எதிரொலித்தது. இருப்பினும் பிற்பகலில், வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, எரிசக்தி நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது.
கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்துள்ள அதே நேரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் ஏறுமுகம் கண்டுள்ளது. இவை முதலீட்டாளர்களிடையே பங்குகளை வாங்குவதற்கு உந்துதலை ஏற்படுத்தியதால், சந்தை 5-ஆவது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் நிகர அளவில் ரூ.825 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
1,884 பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,494 நிறுவனப் பங்குகளில் 1,487 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 1,884 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இடம்பிடித்தன. 123 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 124 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 16 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.96 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.271.26 லட்சம் கோடியாக இருந்தது.
தள்ளாட்டம்: காலையில் 66.48 புள்ளிகள் குறைந்து 58,049.02-இல் தொடங்கிய சென்செக்ஸ், 57,744.70 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 58,328.41 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 20.86 புள்ளிகள் (0.04 சதவீதம்) கூடுதலுடன் 58,136.36-இல் நிலைபெற்றது. காலை தொடக்கத்தில் தள்ளாட்டம் இருந்தாலும், பிற்பகலில் "காளை'யின் ஆதிக்கம் மேலோங்கியது.
இன்டஸ்இண்ட் பேங்க் அபாரம்:
சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் பிரபல தனியார் வங்கியான இன்டஸ்இண்ட் பேங்க் 2.59 சதவீதம், ஏஷியன் பெயிண்ட்ஸ் 2.18 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
இவற்றுக்கு அடுத்ததாக, என்டிபிசி, மாருதி சுஸுகி, கோட்டக் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பவர் கிரிட், எஸ்பிஐ, எம் அண்ட் எம் ஆகியவை 1.50 முதல் 1.85 சதவீதம் வரை உயர்ந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு உயர்ந்து ஏற்ற பட்டியலில் இருந்தன.
டெக் மஹிந்திரா வீழ்ச்சி: அதே சமயம், பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 1.63 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி பேங்க், பார்தி ஏர்டெல் உள்ளிட்டவை 1 முதல் 1.30 சதவீதம் வரை விலை குறைந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 5 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 850 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,105 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. "நிஃப்டி 50' பட்டியலில் 26 பங்குகள் விலை குறைந்தன. 24 பங்குகள் ஆதாயம் பெற்றன.
வர்த்தக முடிவில் நிஃப்டி 5.40 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயர்ந்து 17,345.45-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது, 17,215.85 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னர்அதிகபட்சமாக 17,390.15 வரை உயர்ந்தது.