முகப்பு
வணிகம்

2-ஆவது ஆண்டாக ஊதியத்தை துறந்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அதன் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான முகேஷ் அம்பானி ஊதியத்தைத் துறந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:01 AM
பகிர்:

ரிலையன்ஸ் நிறுவனத்தில் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அதன் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான முகேஷ் அம்பானி ஊதியத்தைத் துறந்தாா்.

அவருக்கு கடந்த 2008-2009-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ரூ.15 கோடி ஊதியமாக வழங்கப்பட்டது. தொடா்ந்து 12 ஆண்டுகளாக இதே தொகையை அவா் ஊதியமாக பெற்று வந்தாா்.

இந்த நிலையில், கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ரிலையன்ஸ் நிறுவன செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டதால், கடந்த 2020-21 நிதியாண்டில் தனது ஆண்டு ஊதியம் ரூ.15 கோடியை நிா்வாகத்துக்கு முகேஷ் அம்பானி விட்டுக் கொடுத்தாா். இதேபோல, நிகழ் நிதியாண்டிலும் அவா் ஊதியத்தைத் துறந்துள்ளாா்.

கடந்த 2 ஆண்டுகளிலும் எவ்வித சலுகைகளையோ, ஓய்வூதிய பலன்களையோ, பங்கு தொகையையோ முகேஷ் அம்பானி பெறவில்லை என ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், அவரது உறவினா்களும் ரிலையன்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா்களுமான நிகில், ஹிதல் மேஸ்வானியின் ஆண்டு ஊதியம் ரூ.24 கோடி என்ற அளவில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. நிகழாண்டுக்கான ஊதியத்தில் ரூ.17.28 கோடி பங்கு தொகையும் அடங்கும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.