மலையாளக் கரையோரம் யோகிபாபு!
மலையாளத்தில் யோகிபாபு அறிமுகமாகவுள்ளது பற்றி...
நடிகர் யோகிபாபு மலையாள திரையுலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொல்லு சபா நிகழ்ச்சியின் உதவி இயக்குநராக இருந்த யோகி பாபு, அமீரின் யோகி படத்தில் முதல்முறையாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
பின்னர், மண்டேலா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான யோகி பாபு, பொம்மை நாயகி, யானை முகத்தான், லக்கி மேன், தூக்கு துரை, குழந்தைகள் முன்னேற்ற கழகம் எனப் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். மண்டேலா திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது.
தற்போது அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ள யோகிபாபுவின் 300-வது படமான “அர்ஜுனன் பேர் பத்து” டீசர் வெளியாகியுள்ளது. கோடை வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ஆதார் திடைப்படம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், சர்வதேச விருதுகளையும் பெற்றது.
இந்த படத்தின் மலையாள ரீமேக்கில் யோகிபாபு நடிக்கவுள்ளதாக இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே பிரித்வி ராஜ் நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தில் யோகி பாபு சில காட்சிகளில் நடித்துள்ளார்.
'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' உள்ளிட்ட திரைப்படங்களை ராம்நாத் பழனிகுமார் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.