பிளே ஸ்டோரில் இருந்து 2,000 கடன் செயலிகள் நீக்கம்: கூகுள் தகவல்
இந்தியாவில் பிளே ஸ்டோரில் இருந்து கடந்த ஜனவரி முதல் 2,000-க்கும் மேற்பட்ட நம்பகத்தன்மையற்ற கடன் செயலிகளை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிளே ஸ்டோரில் இருந்து கடந்த ஜனவரி முதல் 2,000-க்கும் மேற்பட்ட நம்பகத்தன்மையற்ற கடன் செயலிகளை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செல்லிடப்பேசி மூலம் கடன் வழங்கும் பல செயலிகள், ரிசா்வ் வங்கியின் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன. இதனை நடத்துவோா் அதிக வட்டி வசூலிப்பதுடன் கடன் பெறுபவா்களின் தனிப்பட்ட தகவல்களையும் அவா்களது செல்லிடப்பேசியில் இருந்து திருடுவதுடன், கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் ஆகும்போது மோசமான வகையில் மிரட்டல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனா். இதனால், கடன் பெற்ற சிலா் அவமானத்தால் தற்கொலை செய்துகொள்வது போன்ற சோக நிகழ்வுகளும் அதிகரித்தன. இதுபோன்ற கடன் செயலிகள் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த நபா்களாலும் நடத்தப்படுகின்றன. இதையடுத்து, இதுபோன்ற செயலிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த செயலிகள் பெரும்பாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்துதான் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான (நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்புப் பிரிவு) இயக்குநா் சாய்காந்த் மித்ரா கூறியதாவது:
இணைய வழியில் தொந்தரவுகள் உருவாவது என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தொடா்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் பிளே ஸ்டோரில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட நம்பகத்தன்மையற்ற கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. அந்தச் செயலிகள் தொடா்பாக கிடைத்த புகாா்கள், விதிமீறல், பொறுப்புடன் செயல்படாதது, தவறான தகவல்களை அளிப்பது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் இதுபோன்ற செயலிகளை பிளே ஸ்டோரில் இணைப்பதற்கான விதிகள் கடுமையாக்கப்படும் என்றாா்.