சென்செக்ஸ் மேலும் 375 புள்ளிகள் முன்னேற்றம்
இந்த மாதத்தின் முதல் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி இருந்தது.
இந்த மாதத்தின் முதல் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 61,000 புள்ளிகளைக் கடந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 133.20 புள்ளிகள் ( 0.74 சதவீதம்) உயர்ந்து 18,145.40-இல் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. குறிப்பாக ஆசியா, ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றம் பெற்றிருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் தொடக்கத்திலேயே எதிரொலித்தது. இதனால், சந்தை நான்காவது நாளாக எழுச்சி பெற்றது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
375 புள்ளிகள் உயர்வு: சென்செக்ஸ் காலையில் 543.14 புள்ளிகள் கூடுதலுடன் 61,065.58-இல் தொடங்கி 61,289.73 வரை உயர்ந்தது. பின்னர் , 60,868.69 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 374.76 புள்ளிகள் (0.62 சதவீதம்) உயர்ந்து 61,212.35-இல் முடிவடைந்தது.
என்டிபிசி அபாரம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் ஆக்ஸிஸ் பேங்க் 3.75 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மாருதி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் ஆகியவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன. மற்ற 26 பங்குகளும்ஆதாயம் பெற்றன.
இதில் பொதுத்துறை மின் நிறுவனமான என்டிபிசி 5 சதவீதம், பவர் கிரிட் 3.75 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக டாக்டர் ரெட்டி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை 2 முதல் 2.40 சதவீதம் உயர்ந்தன. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், விப்ரோ உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.22 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.2 82.14 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த திங்களன்று ரூ.4,178.61 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.