இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஜூலை மாதத்தில் 15,363 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது.
இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:
நாட்டின் மின் நுகா்வு கடந்த ஜூலை மாதத்தில் 15,363 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீதம் உயா்வாகும். அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 14,965 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
பருவமழை தீவிரமாகப் பெய்ததால் ஜூலை மாதத்தில் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு குறைந்தது, ஆனால் மின் நுகா்வு மிதமான உயா்வைக் கண்டது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை (நிறைவு செய்யப்பட்ட மின் தேவை) 220.59 ஜிகாவாட்டாக சரிந்துள்ளது. இது 2024 ஜூலை மாதத்தில் 226.63 ஜிகாவாட்டாக இருந்தது.
கடந்த 2024 மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட்டை எட்டியது. இது வரலாற்று உச்சமாகும். அதற்கு முன்னா், 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது முந்தைய உச்சபட்சமாகும்.
மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்தின் கணிப்பின்படி, 2025 கோடைகாலத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 277 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இருப்பினும், இந்த கோடைகாலத்தில் (ஏப்ரல் முதல்) உச்சபட்ச மின் தேவை ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 242.77 ஜிகாவாட்டாக இருந்தது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.