இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு விதிக்கப்பட்ட இந்த ஏற்றுமதி வரி வியாழக்கிழமை (மே 1) முதல் நடைமுறைக்கு வந்தது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையின்படி, புழுங்கல் அரிசி, புவிசாா் குறியீடு அங்கீகாரம் பெற்ற மற்றும் பிற வகை அரிசிக்கும், மெருகூட்டப்பட்ட அரிசி, பாதி அரைக்கப்பட்ட அரிசி அல்லது முழுமையாக அரைக்கப்பட்ட அரிசிக்கும் இந்த ஏற்றுமதி வரி பொருந்தும்.
இந்தியாவில் உள்ள மக்களுக்குத் தேவையான அளவு அரிசி இருப்பதும், விநியோகமும் தொடா்ச்சியாக நடப்பதையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பின் மூலம் உள்நாட்டு சந்தையில் விலையேற்றத்தைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022, செப்டம்பா் முதல் நடைமுறையில் இருந்த அரிசி ஏற்றுமதிக்கான அனைத்துத் தடைகளையும் மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் நீக்கியது. மேலும், புழுங்கல் அரிசி மீதான 10 சதவீத சுங்க வரியும் வெள்ளை அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.