கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 9 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மழைக்காலம் மற்றும் ராசியில்லாத காலமாகக் கருதப்படும் பித்ரு பட்சம் (செப்டம்பர்) காரணமாக கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சென்னை, தில்லி-என்சிஆர், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் எழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 9 சதவீதம் சரிந்து 97,080-ஆக உள்ளது.
எனினும், மதிப்பு ரீதியில் விற்பனை 14 சதவீதம் உயர்ந்து ரூ.1.52 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,07,060 வீடுகள் ரூ.1.33 லட்சம் கோடிக்கு விற்பனையாகின.
மதிப்பீட்டு காலகட்டத்தில் மும்பை பெருநகரப் பகுதியில் 16 சதவீதம் குறைந்து 30,260-ஆக உள்ளது. அந்த எண்ணிக்கை புணேயில் 13 சதவீதம் குறைந்து 16,620-ஆகவும், தில்லி-என்சிஆரில் 11 சதவீதம் குறைந்து 13,920-ஆகவும் உள்ளது.
2024-ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வீடுகள் விற்பனை பெங்களூரில் 1 சதவீதம் குறைந்து 14,835-ஆக உள்ளது. ஹைதராபாதில் 11 சதவீதம் குறைவாக 11,305 வீடுகள் விற்பனையாகின.
எனினும், மதிப்பீட்டு காலகட்டத்தில் வீடுகள் விற்பனை கொல்கத்தாவில் 4 சதவீதம் உயர்ந்து 4,130-ஆகவும் சென்னையில் 33 சதவீதம் உயர்ந்து 6,010-ஆகவும் உள்ளது.
கடந்த ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் இந்த ஏழு நகரங்களிலும் வீடுகளின் சராசரி விலை 9 சதவீதம் உயர்ந்து சதுர அடிக்கு ரூ.9,105-ஆக உள்ளது.
விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 5,61,756-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.