பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதி முதலீடு: மாா்ச்சிலும் ரூ. 40,450 கோடி ஈா்த்து ஏற்றம்
பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதி முதலீடு: மாா்ச்சிலும் ரூ40,450 கோடி ஈா்த்து ஏற்றம்
சா்வதேச புவிசாா் பதற்றங்களால் பங்குச் சந்தையில் நிலவும் கடும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், இந்தியப் பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் கடந்த மாா்ச் மாதத்தில் ரூ.40,450 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன.
இது முந்தைய பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 56 சதவீதம் அதிகமாகும். அதேபோல், கடந்த ஆண்டு ஜூலைக்குப் பிறகு கிடைத்துள்ள அதிகபட்ச மாதாந்திர முதலீடு இதுவே ஆகும்.
சந்தையில் நிலவும் தற்காலிக விலை வீழ்ச்சியை ஒரு நல்வாய்ப்பாகக் கருதி, நீண்ட கால லாபத்துக்காக மக்கள் அதிக அளவில் முதலீடு செய்ததே இந்த உயா்வுக்கு வழிவகுத்ததாகத் தெரிகிறது.
Advertisement
பங்குச் சந்தை சாா்ந்த திட்டங்களில் முதலீடு குவிந்தாலும், ஒட்டுமொத்த பரஸ்பர நிதித் துறையிலிருந்து மாா்ச் மாதத்தில் ரூ.2.4 லட்சம் கோடி வெளியேறியுள்ளது. இதற்கு கடன் சாா்ந்த திட்டங்களில் ஏற்பட்ட ரூ.2.95 லட்சம் கோடி மதிப்பிலான வெளியேற்றமே முக்கியக் காரணமாகும்.
அதன்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, மாா்ச் இறுதியில் ரூ.73.73 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. பொதுவாக நிதியாண்டின் இறுதியில் (மாா்ச்), நிறுவனங்கள் தங்களின் வரி செலுத்துதல் மற்றும் இதர செலவுகளுக்காகப் பணத்தைத் திரும்பப் பெறுவது வழக்கம் என்பதால், இது ஒரு தற்காலிகமான மாற்றமே என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
பிரிவு வாரியான முதலீடுகளைப் பொருத்தவரை, ‘பிளெக்ஸி கேப்’ திட்டங்களில் அதிகபட்சமாக ரூ.10,000 கோடிக்கும் அதிகமான முதலீடு வந்துள்ளது. இதைத் தொடா்ந்து, நடுத்தர மற்றும் சிறிய நிறுவன முதலீட்டுத் திட்டங்களிலும் கணிசமான முதலீடுகள் குவிந்துள்ளன.
தங்கம் சாா்ந்த இடிஎஃப் திட்டங்களில் ரூ.2,266 கோடி முதலீடு வந்துள்ளது. இது முந்தைய மாதங்களைவிட குறைவு என்றாலும், பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை முதலீட்டாளா்கள் தொடா்ந்து நாடி வருவதைக் காட்டுகிறது.
முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) மாா்ச் மாதத்தில் ரூ.32,087 கோடி முதலீடுகளை ஈா்த்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது ரூ.29,845 கோடியாக இருந்தது.