முகப்பு
வணிகம்

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.18 இழப்பாகவும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பு ரூ.35 ஆக உள்ளது.

Updated On : 14 ஏப்ரல், 2026 at 8:42 PM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 8:31 PM

புதுதில்லி: மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கம் இந்தியாவில் எரிசக்தி துறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருவதையடுத்து, அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை எரிபொருள் விற்பனையாளர்கள், விற்பனை விலையை மாற்றாமல் வைத்திருப்பதால், பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.18 இழப்பாகவும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பு ரூ.35 ஆகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை நிர்ணயம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும், பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை ஏப்ரல் 2022 முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை.

தற்போது, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையான ஏற்ற இறக்கங்கள் சந்தித்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போரைத் தொடர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருந்த கச்சா எண்ணெய் விலை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 70 டாலராக சரிந்தது. பிறகு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலையடுத்து, கடந்த மாதம் கச்சா எண்ணெய் விலை சுமார் 120 டாலராக உயர்ந்தது.

Advertisement

கடந்த மாதம் விலை உச்சத்தில் இருந்தபோது, ​​பொதுத்துறை நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் ரூ.2,400 கோடி இழப்பைச் சந்தித்தன. பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ. 10 வீதம் குறைத்ததைத் தொடர்ந்து, தினசரி இழப்பு ரூ.1,600 கோடியாகக் குறைந்தது.

மார்ச் மாதத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஈட்டிய அனைத்து லாபங்களையும் முழுமையாக அழித்துவிட்டதாக தெரிவித்தனர்.

பீப்பாய் ஒன்றுக்கு, கச்சா எண்ணெய் விலை 135 முதல் 165 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்த போது, இந்திய ​​எரிபொருள் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.18க்கும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.35ஐ தொடர்ந்து இழந்து வந்தனர். அதே வேளையில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 அமெரிக்க டாலர் அதிகரிக்கும் போதெல்லாம், இழப்பு லிட்டருக்கு சுமார் ரூ.6ஆக அதிகரித்தது.

இதற்கிடையில், ஏப்ரல் மாதம் தேர்தல்கள் முடிந்த பிறகு, எரிபொருள் விற்பனை விலை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. மொத்த இறக்குமதியில் சுமார் 45 சதவீதம் மத்திய கிழக்கிலிருந்தும், 35 சதவீதம் ரஷ்யாவிலிருந்தும், 6 சதவீதம் அமெரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்து வருகிறது.

இந்தநிலையில், டீசல், பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்ட முக்கியப் பெட்ரோலியப் பொருட்களின் நிகர ஏற்றுமதி நாடாகவே இந்தியா திகழ்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

summary

Losses on petrol have widened to Rs 18 per litre and to Rs 35 on diesel as state-owned fuel retailers continue to keep pump prices frozen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.