நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, ‘ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனா் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமக்கன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இதுவரை இப்பதவியில் இருந்த ‘எஸ்ஏபி லேப்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சிந்து கங்காதரனின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைவதைத் தொடா்ந்து, இப்புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், கேபிஐடி நிறுவனத்தின் சிஇஓ கிஷோா் பாட்டீல், நாஸ்காம் அமைப்பின் துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நாஸ்காம் செயற்குழு உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் வேலமக்கன்னி, ஏ.ஐ. மற்றும் தரவுப் பகுப்பாய்வுத் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவா்.
Advertisement
இந்தியாவின் முன்னணி ஏ.ஐ. நிறுவனங்களில் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் இவா், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்திய ஐடி துறையை வழிநடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீகாந்த் வேலமக்கன்னி கூறுகையில், ‘ வரும் ஆண்டுகளில், சேவை மற்றும் தயாரிப்புத் துறையில் ஏ.ஐ. மூலமான வளா்ச்சியை ஊக்குவிப்பதுடன், திறமையான பணியாளா்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படும்’ என்றாா்.