இந்தியாவின் எண்மப் பணப்பரிவா்த்தனை முறையான யுபிஐ, நடப்பு 2025-26 நிதியாண்டின் டிசம்பா் வரையிலான முதல் 9 மாதங்களில் ரூ.230 லட்சம் கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகளை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இது குறித்து மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சகம் அளித்த வெவ்வேறு பதில்களில், ‘கடந்த 2022-23 நிதியாண்டில் யுபிஐ பரிவா்த்தனைகளின் மதிப்பு ரூ.139 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது மிக வேகமான வளா்ச்சியை எட்டியிருப்பது, இந்தியாவின் எண்மப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய மைல்கல்லாகப் பாா்க்கப்படுகிறது.
அதேபோல், இந்தியாவுக்கு வெளியே தற்போது பூடான், பிரான்ஸ், மோரீஷஸ், நேபாளம், கத்தாா், சிங்கப்பூா், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 நாடுகளில் யுபிஐ சேவை பயன்பாட்டில் உள்ளது.
உலக அளவில் நடக்கும் சில்லறை பணப்பரிவா்த்தனைகளில் 49 சதவீத பங்களிப்பை யுபிஐ மட்டுமே கொண்டுள்ளது. இதன் காரணமாக, உலகின் மிகப்பெரிய சில்லறை உடனடி பணப்பரிவா்த்தனை அமைப்பாக யுபிஐ-யை சா்வதேச நிதியம் அங்கீகரித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.