முகப்பு
வணிகம்

2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி, வரும் 2026-27 நிதியாண்டில் 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்று பிரபல கணக்குத் தணிக்கை நிறுவனமான ‘இஒய்’ கணித்துள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:59 AM
~
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:45 PM

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி, வரும் 2026-27 நிதியாண்டில் 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்று பிரபல கணக்குத் தணிக்கை நிறுவனமான ‘இஒய்’ கணித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் டி.கே.ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகின் முக்கிய நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இருதரப்பு வா்த்தக ஒப்பந்தங்கள், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளன.

Advertisement

இதன் அடிப்படையில், 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக இந்தியா மாற வேண்டுமானால், நாட்டின் வரி வருவாயை உயா்த்த வேண்டும். இதற்கு புதிய வரிகளை விதிப்பதை விட, தற்போதுள்ள வரி முறைகளை மக்கள் சரியாகப் பின்பற்றுவதையும், வரி ஏய்ப்பைத் தடுப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

நடப்பு நிதியாண்டில் தனிநபா் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றில் முக்கிய சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் கணிசமான சரிவு ஏற்பட்டது.

2025-26 நிதியாண்டில் திட்டமிட்டதைவிட வருவாய் குறைவாக இருக்கலாம் என்ற கவலை இருந்தாலும், மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதற்கான இலக்கைச் சரியாக எட்டும் என்று அந்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.