அசோக் லேலேண்ட் 3 வது காலாண்டு லாபம் 5.19% அதிகரிப்பு!
வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலேண்ட் 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.862.24 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
புதுதில்லி: வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலேண்ட், டிசம்பர் 2025 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.19 சதவீதம் உயர்ந்து ரூ.862.24 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.819.67 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது. அதே வேளையில் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த வருவாய் ரூ.14,830.24 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.11,995.21 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் மொத்த செலவுகள் ரூ.13,490.15 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.10,937.89 கோடியாக இருந்தது.
நிதியாண்டின் 3வது காலாண்டில், நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனத்தின் விற்பனையானது 32,929 வாகனங்களாக இருந்தது. இதுவே கடந்த வரும்ட இதே காலத்தில் இது 26,692 வாகனங்களாக இருந்தது. இது சுமார் 23% வளர்ச்சியாகும்.
இலகுரக வணிக வாகனத்தின் விற்பனை கடந்த ஆண்டின் 3வது காலாண்டில் 15,754 வாகனங்களோடு ஒப்பிடும்போது, நிதியாண்டின் இதே காலத்தில் இது 20,518 வாகனங்களாக உள்ளது என்றும், இது 30 சதவீதம் அதிகம் என்றது நிறுவனம்.
ஏற்றுமதி பெறுத்தவரை கடந்த ஆண்டு 4,151 வாகனங்களோடு ஒப்பிடும்போது, நிதியாண்டின் இதே காலாண்டில் இது 4,965 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.