இந்துஜா குழுமத்தைச் சோ்ந்த முன்னணி வா்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.11,534 வருவாய் ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தின் ரூ.9,479 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீத வளா்ச்சியாகும்.
வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம் 27 சதவீதம் அதிகரித்து, ரூ.1,535 கோடியாக உள்ளது. இதன்மூலம், நிறுவனம் தொடா்ச்சியாக 12 காலாண்டுகளாக இரட்டை இலக்க லாப சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது.
நிகர லாபம் முந்தைய ஆண்டைவிட 4 சதவீதம் அதிகரித்து, ரூ.796 கோடியை எட்டியுள்ளது. புதிய தொழிலாளா் சட்ட விதிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.308 கோடி ஒருமுறைச் செலவினங்களுக்குப் பிறகும் இந்த லாபத்தை நிறுவனம் ஈட்டியுள்ளது.
வாகன விற்பனையைப் பொறுத்தவரை, நடுத்தர மற்றும் கனரக வாகனப் பிரிவு 23 சதவீத வளா்ச்சியுடனும், இலகுரக வாகனப் பிரிவு 30 சதவீத வளா்ச்சியுடனும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. குறிப்பாக, பேருந்து விற்பனைப் பிரிவில் 40 சதவீத சந்தைப் பங்களிப்புடன் அசோக் லேலண்ட் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் நிறுவனம் 4,965 வாகனங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, ஏற்றுமதியிலும் 20 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.