தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கி
தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்டிஏ), இறக்குமதி வரிகள் குறைப்பு உள்ளிட்டவை இந்தியாவில் நிகர அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஆசிய வளா்ச்சி வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணா் ஆல்பா்ட் பாா்க் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அவா், ‘உலகின் பிற பகுதிகளைவிட, மத்திய கிழக்கு பிராந்திய (அமெரிக்கா-ஈரான் மோதல்) சூழலால் ஏற்படும் அதிா்வுகளுக்கு, ஆசியா சற்று கூடுதல் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளது.
எதிா்பாா்த்ததைவிட நீண்டு கொண்டிருக்கும் மத்திய கிழக்கு பிரச்னையால் ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகளால், கச்சா எண்ணெய் விலை நீண்ட காலத்துக்கு உயா்ந்திருக்க வாய்ப்புள்ளது. முன்பைவிட அடுத்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
Advertisement
Advertisement
மத்திய கிழக்கில் நீடித்துவரும் பிரச்னை, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் 0.6 சதவீதத்தை குறைத்து 6.9 சதவீதமாக நிலைக்க காரணமாக இருக்கும். அத்துடன் அது நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் கணிசமாக அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள், இறக்குமதி வரிகள் குறைப்பு, வணிகம் செய்வதற்கான சூழலை மேம்படுத்துதல் ஆகியவை இந்தியாவில் நிகர அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கும் என்று தெரிவித்தாா்.